நெஞ்சோடு கலந்திடு – 31

(Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 31)

Raja 2014-02-01 Comments

திவ்யா இப்போது சற்றே ஏளனமாக சித்ராவை ஒரு பார்த்தாள். ‘இது என்ன புதுக்கதையாக இருக்கிறது..? ஒருமனிதன் எதற்காக தன்னைப் பற்றியே கேவலமாக சொல்லிக் கொள்ள வேண்டும்..? திவாகர் அப்படிப்பட்டவர் கிடையாது.. அக்காவும், தம்பியும் சேர்ந்துகொண்டு என்னை குழப்ப நினைக்கிறார்கள்..!!’ மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்ட திவ்யா, மீண்டும் தன் பார்வையை சித்ராவின் முகத்திலிருந்து வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள்.

திவ்யாவுடைய நெஞ்சு இன்னும் மேலும் கீழுமாய் வேகமாக ஏறி இறங்கி, அவசர மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. சித்ராதான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் திவ்யாவிற்கு தாகமெடுத்தது. டேபிள் மீது இருந்த தண்ணீர் ஜக்கை எட்டி எடுத்தாள். ‘கடகட’வென நீரை தொண்டைக்குள் நிறைய சரித்துக் கொண்டாள். திவ்யா நீர் அருந்தி முடிக்கும் வரை, அவளுடைய முகத்தையே சித்ரா பொறுமையில்லாமல் முறைத்துக் கொண்டிருந்தாள்.

நீரருந்தி முடித்த திவ்யா, இப்போது செல்போனை கையிலெடுத்து நோண்ட ஆரம்பிக்க, சித்ரா நிஜமாகவே படு எரிச்சலானாள். அவளுடைய கையிலிருந்த செல்போனை வெடுக்கென பிடுங்கி மெத்தை மீது எறிந்தாள். திவ்யா எதுவும் சொல்லவில்லை. சித்ராவை ஏறிட்டும் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு தன் சுவாசத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். சித்ரா இப்போது எரிச்சலான குரலில் திவ்யாவிடம் கேட்டாள்.

“நான் இவ்வளவு சீரியஸா இங்க பேசிட்டு இருக்கேன்.. நீ செல்லை நோண்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? நான் உன் வாழ்க்கையைப் பத்தித்தாண்டி பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..?? நீ எவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கிருக்கேன்னு உனக்கு புரியுதா..?? அந்த திவாகர் ரொம்ப ஆபத்தானவன் திவ்யா.. அவன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து..!! அவனை பத்தி இன்னும் சொல்றேன்.. அவன் எந்த மாதிரி ஆளுன்னு நீயே ஒரு முடிவுக்கு வா..!!”

கண்கள் மூடி அமைதியாக இருந்த திவ்யா, இப்போது தன்னையும் அறியாமல் தன் காதுகளை கூர்மையாக்கி, சித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தாள். சித்ரா அவள் பேசிய வேகத்திலேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“நேத்து அந்த திவாகர் என்ன பண்ணிருக்கான் தெரியுமா..?? நீயும் அவனும் ஏதோ ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போயிருந்தீங்களாமே..? அசோக்கும் அப்போ அங்கதான் இருந்திருக்கான்.. நீ ஹேன்ட் வாஷ் பண்ண போயிருந்தப்போ.. அசோக்குக்கு ஃபோன் பண்ணி.. ‘இப்போ உன் ஆளு வருவா.. அவ மேல கை போடுறேன்.. பாத்துட்டுப்போ..’ன்னு எகத்தாளமா சொல்லிருக்கான்..!! எவ்வளவு ஒரு கேவலமான, வக்கிரமான புத்தி இருந்தா.. ஒரு ஆளு இப்படி சொல்லிருப்பான்..? அவன் கைல உன் வாழ்க்கையை ஒப்படைச்சா.. என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..!!”

சித்ரா சொல்ல சொல்லவே, திவ்யாவின் மூளைக்குள் சுருக்கென்று ஏதோ தைத்தது..!! அவ்வளவு நேரம் வேண்டா வெறுப்பாக அண்ணியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவளுடைய முகத்தில், பட்டென ஒரு சீரியஸ்னஸ் வந்து உட்கார்ந்து கொண்டது. நிமிர்ந்து அமர்ந்தாள். அவளுடைய மனம் பரபரப்பாய் பலவிஷயங்களை யோசிக்க ஆரம்பித்தது.

‘என்ன சொல்லுகிறாள் இவள்..? இவள் சொல்வது உண்மையா..? ஆமாம்.. நான் துப்பட்டாவை வாஷ் செய்துகொண்டிருந்தபோது, திவாகர் தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாரே..? அது வேறு யாரிடமோவா.. இல்லை இவள் சொல்வது மாதிரி அசோக்கிடமா..? ஒருவேளை அசோக்கிடம்தானோ..? அவனிடம்தான் இவள் சொல்வது மாதிரி பேசினாரோ..? அதனால்தான் என்றும் இல்லாத வழக்கமாய் என் தோள் மீது கை போட்டு அணைத்தாரா..? அதைப் பார்த்த ஆத்திரத்தில்தான் அசோக் அப்படி அசுர வேகத்தில் பைக்கில் பறந்தானோ..? இந்தமாதிரி எல்லாம் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளக் கூடிய ஆளா திவாகர்..? இல்லை.. இல்லை.. அவருக்குத்தான் அசோக்குடைய செல்நம்பரே தெரியாதே..? அப்புறம் எப்படி பேசியிருப்பார்..?? இரு இரு.. ஏன் முடியாது..?? என்னுடைய செல்போனில் அசோக்குடைய நம்பர் இருக்கிறதே.. ஹேன்ட் பேக்கின் சைட் ஜிப் வேறு திறந்திருந்ததே..?? ஒருவேளை…??? ஐயோ…!!! இப்போது ஏன் இவர்கள் பேச்சைக் கேட்டு திவாகரை தவறாக எண்ணுகிறாய்..?? இயல்பாக நடந்த விஷயங்களை இவர்கள் ஏதோ திரித்து சொல்கிறார்கள்..!! ஒருவேளை அவை இயல்பாக நடந்தவை இல்லையோ.. இவர்கள் சொல்வதுதான் உண்மையோ..?? ஆஆஆ…!!’

திவ்யா இப்போது உச்சபட்ச குழப்பத்துக்கு உள்ளானாள். அவளுடைய மனக்குளத்தில் ஒரே நேரத்தில் ஓராயிரம் கற்கள் விழுந்த மாதிரியாக, அலைஅலையாய் குழப்ப அதிர்வுகள்..!! சிந்திக்க சிந்திக்க.. மூளை கொதிப்பது போல வலியெடுத்தது திவ்யாவுக்கு..!! திவ்யாவுடைய மாற்றத்தை கவனியாது சித்ரா தொடர்ந்து வேகமாக பேசிக் கொண்டிருந்தாள்.

“நல்ல யோசி திவ்யா.. இந்த மாதிரி ஒரு ஆளை நீ காதலிக்கனுமா..? ஹ்ஹ.. சொல்லப்போனா.. அந்த ஆள் மேல உனக்கு இருக்குறது காதலான்னு கூட எனக்கு சந்தேகமா இருக்குது..!! ‘அவனை காதலிக்கட்டுமா..?’ன்னு அசோக்கிட்ட அபிப்ராயம் கேட்டியாமே..?? காதல்ன்றது ஒரு பொண்ணுக்கு இப்படியாடி வரும்..?? இங்க இருந்து வரணும்டி.. நெஞ்சுல இருந்து வரணும்..!! மனசு சொல்லணும்.. ‘இவன் நமக்கு சொந்தமானவன்.. கடைசிவரை இவன்கூடத்தான் இருக்கப் போறோம்’னு.. மனசு அப்படி சொன்னப்புறம் யார் பேச்சை கேட்டும் அதை மாத்தக்கூடாது..!! உன் மனசு அப்படி சொல்லிருந்ததுன்னா.. அசோக்கிட்ட அந்தமாதிரிலாம் நீ அபிப்ராயம் கேட்டிருக்கமாட்ட.. ‘இவனைத்தான் நான் காதலிக்கிறேன்’னு.. பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிருப்ப..!!”

நிஜமாகவே திவ்யாவிற்கு இப்போது பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது..!! அவளுடைய புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல பலமாக ஒரு அடி விழுந்தது..!! ‘என்ன சொல்கிறாள் இவள்..? அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. கடைசியில் என்னுடைய காதலையே சந்தேகிக்கிறாளே..? திவாகர் மீது எனக்கிருப்பது காதல் இல்லையா..?? காதல் இல்லாமல் வேறென்ன..??’

“அந்த ஆள் ஏதோ விஷம் குடிக்கப் போறேன்னு சொன்னானாம்.. உடனே நீ அழுதுக்கிட்டே ‘ஐ லவ் யூ..’ சொன்னியாம்..?? என்னடி இதுலாம்..?? இதுக்கு பேரா லவ்வு..???” சித்ரா சீற்றமாய் கேட்க, திவ்யா மூச்சு விடாமல் அமர்ந்திருந்தாள்.

“சரி.. இப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..? நான் சொல்றதெல்லாம் கொஞ்சம் கண் மூடி நிதானமா யோசிச்சு பாரு.. உன் மனசு என்ன சொல்லுதுன்னு பாரு..!!” சித்ரா சொல்ல, திவ்யா தலையை குனிந்தவாறே.. அவளுடைய கட்டுப்பாடின்றியே.. அதற்கு தயாரானாள்.

“அசோக்கை நெனைச்சு பாரு.. அசோக்.. உன் அசோக்.. உனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச உன் அசோக்..!! சின்ன வயசுல இருந்தே அவன் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தான்னு கொஞ்சம் நெனச்சு பாரு.. உனக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு பாத்து பாத்து செய்வானே..? உன் சந்தோஷத்துக்காக அவன் என்னெல்லாம் பண்ணிருக்கான்னு நெனச்சு பாரு.. அவனை விட உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாராவது உண்டான்னு யோசி..!! அவனை கட்டிக்கிட்டா நீ எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு நெனச்சு பாரு..”

சித்ரா சொல்ல சொல்ல.. திவ்யாவின் மனதுக்குள் ஒரு படம் ஓட ஆரம்பித்தது..!! அசோக்கை தன் காதலனாக.. கணவனாக.. கழுத்தில் மாங்கல்யம் சூட்டுபவனாக.. காதலோடு மார்பில் சாய்த்துக் கொள்பவனாக..!! நினைக்க நினைக்க.. ஒரு இனம்புரியாத உணர்ச்சி அலை திவ்யாவின் உடலெங்கும் ஓடியது..!! படக்கென தன் தலையை பலமாக உதறி, அந்த உணர்வை வெட்டி எறிந்தாள்..!! ‘என்ன இது.. என் மனம் ஏன் இப்படி எல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறது..?’

திவ்யா உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி திளைத்துக் கொண்டிருக்க, சித்ராவின் கண்களில் இப்போது திடீரென கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. விழிகளில் தேங்கிய நீருடன் தழதழத்துப் போன குரலில் சொன்னாள்.

“என் மனசாட்சியை தொட்டு சொல்றேண்டி.. அசோக் மாதிரி ஒரு நல்ல புருஷன் சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டான்..!! அவனை வெறுத்து ஒதுக்கி.. அவன் வாழ்க்கையையும் பாழாக்கி, உன் வாழ்க்கையையும் பாழாக்கிக்காத..!!”

சொல்லி முடிக்கும் முன்பே, கண்களில் தேங்கியிருந்த நீர் இப்போது சித்ராவின் கன்னங்களை நனைத்து ஓட ஆரம்பித்தது. அழுகிற விழிகளுடனே.. அவளது கைகள் இரண்டையும் கூப்பி.. தொழுது.. திவ்யாவிடம் பரிதாபமாக கெஞ்சினாள்..!!

“ப்ளீஸ் திவ்யா.. அண்ணி உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! என் தம்பியை ஏத்துக்கோ.. அவன் வாழ்க்கையை காப்பாத்து..!! ப்ளீஸ்..!!”

திவ்யா இப்போது தனது விழிகளை உயர்த்தி, தன் எதிரே நிற்கும் சித்ராவை ஏறிட்டாள். ஏறிட்டவள் அவள் நின்றிருந்த கோலத்தை கண்டதும், ஒருகணம் அப்படியே திகைத்துப் போனாள். இவள் ஒருநாள் இப்படி ஒரு கோலத்தில் தன் எதிரே நிற்கப் போகிறாள் என்று திவ்யா கனவிலும் எண்ணியது இல்லை. கைகூப்பி தன் முன் நிற்கும் அண்ணியைப் பார்த்து திவ்யா கலங்கிப் போனாள். ஆனால் அந்த கலக்கத்தை வெளியில் காட்ட விருப்பம் இல்லாதவளாய், மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

Comments

Scroll To Top