கண்ணாமூச்சி ரே ரே – 59

(Tamil Kamakathaikal - Kannamoochi Rae Rae 59)

Raja 2014-07-15 Comments

Tamil Kamakathaikal – “மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!”

“மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!”

“கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு…!!”

“இ..இருடி..!!”

335

“விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!”

“கொஞ்சம் இருடி..!!”

ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!! அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!!

கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!! ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!! ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!!

சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்.. அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. ‘நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்’ என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!

“ம்ம்ம்.. மேல இழுக்கா.. சீக்கிரம்..!!” தாமிரா அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.

ஆதிராவின் முகம் திடீரென ஒரு திருட்டுச்சாயம் பூசிக்கொள்ள, தாமிராவை இறுகப் பற்றியிருந்த பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்.. தங்கையின் கையோடு அழுந்தியிருந்த அவளது ஐந்து விரல்களும், கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கம் கொடுத்தன..!! ஓரிரு விநாடிகள்தான்.. ஆதிராவின் மொத்த மனமாற்றமுமே ஓரிரு விநாடிகள்தான்.. காதலின் வெற்றியை பெரிதென கருதிய ஆதிரா, அதற்கென தங்கையையும் பலிகொடுக்க நினைத்துவிட்ட அந்த ஓரிரு விநாடிகள்.. இந்தக்கதைக்கு மிக மிக முக்கியமான அந்த ஓரிரு வினாடிகள்..!!

ஆனால்.. அந்த ஓரிரு வினாடிகளே தாமிராவுக்கு போதுமானதாக இருந்தது.. அக்காவின் உள்நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு..!! அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆதிரா தன்மீது கோவத்தில் இருக்கிறாள் என்று தாமிராவுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், இப்படி தனது உயிரை தொலைத்தாவது அவளது காதலைப் பெற எண்ணுவாள் என்று சத்தியமாக தாமிரா நினைத்திருக்கவில்லை..!! அக்காவின் முகத்தையே ஏக்கமும், பரிதாபமுமாக பார்த்தாள்..!!

“அக்காஆஆஆஆ..!!” என்று இதயத்தை பிசைவது மாதிரியாக ஈனஸ்வரத்தில் ஓசை எழுப்பினாள்.

அவ்வளவுதான்..!! தங்கையின் பரிதாப முகத்தை பார்த்த ஆதிரா, இப்போது பட்டென சுதாரித்துக் கொண்டாள்.. இயல்பாகவே அவளுக்கு தங்கை மீதிருக்கிற அன்பு, திடீரென எழுந்த அந்த மிருக குணத்தை விரட்டியடித்திருந்தது..!! ‘ச்சே. என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டோம்..’ என்று தன்னைத்தானே கேவலமாக கடிந்துகொண்டவாறு..

“தாமிராஆஆஆ..!!!”

என்று பதிலுக்கு பாசமாக அழைத்தபடியே, தாமிராவின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொள்ள முயன்றாள்.. ஆனால்.. அது தாமதமான முயற்சியாக அமைந்துபோனது..!! ஆதிராவின் கணநேர செயல்பாடு தந்த அதிர்ச்சியில், வாழவேண்டும் என்கிற எண்ணமே தாமிராவுக்குள் இற்றுப்போயிருந்தது.. அக்கா தனது கையை மீண்டும் பற்றிக்கொள்ளும் முன்பே, இவள் அக்காவின் கையை பிடித்திருந்த பிடியை விடுவித்தாள்.. அப்படியே அந்தரத்தில் வீழ்ந்தாள்..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!” பதறிப்போன ஆதிரா பெரிதாக அலறினாள்.

336

கீழே வீழ்ந்த தாமிரா நீண்டதூரம் செல்லவில்லை.. மலைச்சரிவின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த அந்த மகிழம்பூ மரத்தின் மேற்பரப்பில் சென்று விழுந்தாள்.. மரத்தின் கிளைகளுக்குள் அவளது கை,கால்கள் எசகுபிசகாக சிக்கிக்கொள்ள.. அப்படியே அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்தாள்..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!” ஆவி துடித்து வீறிட்டாள் ஆதிரா.

“அக்காஆஆஆஆ..!!” பரிதாபக்குரல் எழுப்பினாள் தாமிரா.

“அக்காவை மன்னிச்சுடுடி.. அக்காவை மன்னிச்சுடு..!! ஏண்டி இப்படி பண்ணுன..??”

ஆதிரா பதற்றத்தில் பிதற்றிக்கொண்டே அல்லாடினாள்.. அவளது கைக்கெட்டும் தூரத்தை தாண்டிப் போயிருந்தாள் அவளது தங்கை.. ஆனால் எப்படியாவது அவளை காப்பாற்றிவிடவேண்டும் என்ற ஒரு புதுவித வேகம் ஆதிராவுக்குள் பிறந்திருந்தது..!! சுற்றி முற்றி பார்த்தாள்..!!

“இருடி வரேன்.. ஒருநிமிஷம்.. அந்த மரத்தை புடிச்சுக்க..!!”

அழுதவாறே ஆதிரா எழுந்து ஓடினாள்.. சிங்கமுக சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட அந்த மேடையின் அடிப்பாகத்தில் சுற்றப்பட்டிருந்தது ஒரு சிவப்புத்துணி.. அதை சரசரவென அவிழ்த்து எடுத்தாள்..!! மலை விளிம்பை அடைந்து.. அந்த துணியை அப்படியே சுருட்டி.. தங்கையின் பக்கமாக வீசினாள்..!!

“அந்த துணியை புடிச்சுட்டு மேல வாடி.. அக்கா டைட்டா புடிச்சுக்குறேன்..!!” கதறினாள் ஆதிரா.

“அக்காஆஆஆஆ..!!”

ஏமாற்றமும், சோகமும் நிறைந்த சப்தத்தை மட்டுமே தாமிரா எழுப்பினாள்.. ‘என்னை இந்த மாதிரி பலிகொடுக்க துணிந்து விட்டாயே அக்கா’ என்பது போல இருந்தது அந்த குரலின் தொனி.. வெறுத்துப்போன விரக்தி மனநிலையில் அவள் அப்போது இருந்தாள்..!! ஆதிரா வீசிய அந்தத்துணியை பற்றிக்கொள்ள சிறுமுயற்சி கூட எடுத்துக் கொள்ளவில்லை..!!

தங்கையின் செய்கையை பார்த்த ஆதிராவின் மனதை.. குற்ற உணர்ச்சி குத்தி குத்தி கிழித்துக் கொண்டிருந்தது..!!

“ப்ளீஸ்டி.. அந்த துணியை புடிச்சுக்கடி.. எப்படியாவது மேல வந்துருடி.. அக்காவை மன்னிச்சுடுடி தாமிரா..!!” ஆதிரா அழுது புலம்பிக்கொண்டிருக்க,

“அக்காஆஆஆஆ..!!” என்று தாமிரா பரிதாபமாக அழைத்துக்கொண்டே இருக்க,

மகிழம்பூ மரத்தின் கிளை இப்போது சரக்கென முறிந்தது.. கொத்தாக வளர்ந்திருந்த வாசனைப் பூக்களின் குவியலோடு.. குழலாற்றை நோக்கி ஆகாயத்தில் பயணம் செய்தாள் தாமிரா..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!”

உயிரே பறிபோவது போல அலறி துடித்தாள் ஆதிரா.. அந்த சிவப்பு துணி அவளது கையில் இருந்து விடுபட்டு காற்றில் பறந்தது.. அதேநேரம் அவள் ரவிக்கைக்குள் செருகி வைத்திருந்த செல்போனும் வெளியே நழுவியது..!! அந்த துணியும், செல்ஃபோனும் தாமிராவுடன் சேர்ந்து குழலாற்றுக்குள் வீழ்ந்தன..!! அங்குமிங்கும் பாறைகளில் முட்டி மோதி, செந்நிற குருதியை பீய்ச்சியடித்தவாறே.. இறுதியாக குழலாற்றில் சென்று நீரை கிழித்துக்கொண்டு வீழ்ந்தாள் தாமிரா..!! அவளைத் தொடர்ந்து சென்று வீழ்ந்தது அந்த செல்ஃபோன்..!! சிவப்புத்துணி மட்டும் காற்றில் அசைந்து அசைந்து மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது..!!

ஆதிராவுக்கு இதயத்துடிப்பே நின்று போனது மாதிரி இருந்தது.. சிறிது நேரம் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே தரையில் வீழ்ந்து கிடந்தாள்..!! அவளது இமைகள் விரிந்துபோய் அப்படியே உறைந்திருந்தன.. சுவாசம் விடக்கூட மறந்துபோனவளாய் அசைவில்லாமல் கிடந்தாள்..!! தனது சுயநலத்தால் தங்கையை பலி கொடுத்துவிட்டோமே என்கிற குற்றஉணர்வு.. அவளது இதயத்தை சல்லடையாக கிழித்துக் கொண்டிருந்தது..!!

ஒருசில வினாடிகள்.. பிறகு என்ன நினைத்தாளோ.. பட்டென எழுந்து நின்றாள்..!! நடந்துமுடிந்த அமளிதுமளியில் அவளது கூந்தல் பிரிந்து முகமெல்லாம் வழிந்துகொண்டிருந்தது..!! தங்கையின் சாவுக்கு காரணமான தானும் இனிமேல் உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் அவளது எண்ணமாக இருக்கவேண்டும்..!! அதே மலைச்சரிவில் வீழ்ந்து உயிர்துறக்க முடிவு செய்தாள்..!! அந்த அதலபாதாள பள்ளத்தாக்கை ஒருமுறை வெறித்து பார்த்தாள்..!!

337

“ஆதிராம்மா.. வேணாம்.. நில்லு..!!”

சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்..!! கையிலிருந்த வெள்ளைநொச்சி இலைகளை தூக்கி எறிந்துவிட்டு.. இவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் வனக்கொடி..!! முகம் மறைக்கிற கூந்தல் கற்றைகளின் இடைவெளியில் அவளையே உற்றுப் பார்த்தாள் ஆதிரா.. ‘உஸ்.. உஸ்..’ என மூச்சிரைத்தாள்..!!

அந்த பள்ளத்தாக்குக்குள் விழுந்துவிடமேண்டும் என்று ஆதிரா பாய.. அதே நேரத்தில் வனக்கொடி ஓடிவந்து இவள் மீது பாய்ந்து, இறுகப்பற்றிக்கொள்ள.. இருவரும் பாதுகாப்பான ஒரு சமவெளியில் உருண்டார்கள்..!! தங்கை இறந்த அன்றே சாக இருந்த ஆதிராவை.. காப்பாற்றி உயிர்கொடுத்தது வனக்கொடிதான்..!!

நடந்து முடிந்ததெல்லாம் முழுவதுமாக நினைவுக்கு வர.. ஆதிரா அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.. லேப்டாப் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ‘தங்கையின் மறைவுக்கு யார் காரணம் யார் காரணம்’ என்று தேடி களைத்துப்போனவள்.. இப்போது தான்தான் காரணம் என்கிற உண்மை உறைக்கவும்.. அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்திருந்தாள்..!!

அகழி வந்ததிலிருந்து அவளுக்கு வந்த அந்த இரண்டு கனவுகளுக்கான அர்த்தம் இப்போது அவளுக்கு நன்றாக புரிந்தது..!! தனது ஆழ்மனதுக்குள் இருந்த உண்மையின் வெளிப்பாடாக அந்த கனவுகள் அவளுக்கு தோன்றிற்று..!! கனவில் தங்கைக்கு நெருக்கமாக இருந்த அந்த உருவத்தின் முகம் மெல்ல மெல்ல இப்போது அவளுக்கு தெளிவானது.. அது சிபியின் முகம்தான்..!! தாமி​ராவை அணைத்துக்கொண்டு சிரித்தது கனவில் வந்த சிபியின் உருவம்..!! தாமிரா மட்டும், ‘அக்காஆஆஆஆ..!! அக்காஆஆஆஆ..!!’ என்று ஈனஸ்வரத்தில் அழைத்துக் கொண்டிருந்தாள்.. அன்று அந்தரத்தில் தொங்கியவாறு அழைத்ததைப் போலவே..!!

தாமிரா இறந்துபோனதன் பிறகு நடந்த சில நிகழ்வுகளும்.. இப்போது சரசரவென ஆதிராவின் மனதுக்குள் ஃப்ளாஷ் அடித்தன..!!

Comments

Scroll To Top